நரி காகத்தினை பார்த்து ‘காக்கா… காக்கா.. (கக்கா.. கக்கா என்று படித்து வைக்காதீர்கள்) நீ ரொம்ப அழகா இருக்கே… ஒரு பாட்டு பாடேன்’ என்றது. காக்கையும் நரியின் புகழ்ச்சியில் மயங்கி ‘கா.. கா..’ என்று பாட துவங்கியது. அப்போது காகத்தின் வாயிலிருந்த வடை நழுவியது.
இந்த ஸீன் இங்கே நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அங்கே பாட்டி தான் சுடுகின்ற வடை கருகிக்கொண்டிருப்பது கூட தெரியாமல் வடை சுட்டுக்கொண்டிந்தாள்.
ஜிம்மி ஜிப் கேமரா கோணத்துல கீழே வர்ர இந்த ஸீனை நினைச்சிப்பருங்க…
மரத்தின் உச்சிக்கிளையில் காகம் பாட்டுப்பாடிக்கொண்டிருக்கிறது.. (அங்கிருந்து கேமரா ஸ்ட்ராட்)
காகம் வாயிலிருந்து நழுவிய வடை மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறது…. (கேமரா வடை கூடவே ட்ராவல்)
நரியும் தன்னை நோக்கி கீழே விழுந்துகொண்டிருக்கும் வடையை மேலே நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. (கேமரா ஃபாலிங்)
‘தொப்’ , ‘தொபுகடீர்’ , ‘பட்’, ‘பட்டென்று’, ‘டம்’, ‘டமால்’…..என்று உங்களுக்கு பிடித்த ஒரு சவுண்டை செலக்ட் செய்து கொள்க.
ஒரு சரியான ஷணத்தில் மேலிருந்து கீழே விழுந்த வடையானது நரியின் உச்சந்தலையில் விழ (செலக்டட் சவுண்ட்…) நரியும் பட்டென்று சாய்ந்துவிட்டது. வடை விழுந்ததால் நரியின் தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் குபு குபுவென கசிய, நரியின் தலையைச்சுற்றி ரத்தம் தரையில் படர்ந்துகொண்டிருந்தது.
இதை பார்த்த காகமோ சட்டென்று மரத்திலிருந்து கீழிறங்கி(?) வந்து நரியினை தொட்டுப்பார்க்க நரி கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருப்பதை அது உணர்ந்தது.
இந்த இழவு தன்னால் தானே நிகழ்ந்தது என்று எண்ணி கலங்கி கண்ணீர் விட்டு, காகம் கனத்து அழுதது.
அழுகை அடங்கியதும் தான் பாட்டியிடமிருந்து சுட்ட வடைக்காக, வடை சுட்ட பாட்டியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று பாட்டியிடம் சென்று….
‘ ஐயகோ என்ன கொடுமை’…. அங்கே பாட்டி கரு(க்)கியிருந்தாள்.
‘திம்’…. யாரோ ஓங்கி என் முதுகில் மிதித்ததை என்னால் உணர முடிந்தது…
‘வீணாப்போனவனே… போனாப்போவுதுன்னு காணமப்போயிருந்த உன்ன கூட்டியாந்து இங்க உட்டா… நீ கும்கி படத்தையே கலாய்க்கிறியா… இப்ப உன்ன குமுக்கி எடுக்கிறேன் பாரு……’
subarappu