கங்கா ஸ்தானம் ஆயிற்று. படகோட்டி தம்பி எங்களைப்பார்த்து கையசைத்தான். நாங்கள் நனைந்த உடையுடன் படகில் ஏறி அமர்ந்தோம். கரையின் அக்கரை பனாரஸ். ஆம் பட்டுக்கு பெயர்போன பனாரஸ்ஸேதான். அது நாகரீக நகரம் என்று என்று என் நண்பன் கூறினான். மீண்டும் கங்கை நதியில் படகில். இம்முறை கூட்டமாய் வெண்பறவைகள் (பெயர் தெரிய வில்லை…) எங்கள் படகை சூழ்ந்து கொண்டன. படகோட்டி நண்பன் அவைகளுக்காக உணவை வீசியெறிந்து விட்டு எங்களையும் அவைகளுக்கு உணவளிக்குமாறு கூறி சில (மிக்ஸர் போன்ற) பொட்டலங்களை எங்களுக்கு அளித்தான் (பொட்டலம் ரூ.5). நாங்கள் வீசியதைத்தொடர்ந்து ஒரு பறவைப்படையே நாங்கள் பயப்படும் அளவிற்க்கு எங்களை முற்றுகையிட்டது. நகராப்படகு. நாங்கள் வீசியெறிந்த உணவை வெண்பறவைகள் சத்தமிட்டபடி பாய்ந்து பிடித்தன. அவைகளுடைய இரைச்சல் இசையாய் என் காதுகளில். அந்த சூழல் என்னை என்னுடைய குழந்தைபருவத்திற்கே அழத்துச்சென்றது. பறவைகளை பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.
மீண்டும் படித்துறையில். நானும் என் நண்பனும் மட்டும் தனியே படித்துறையில் நடந்துசென்றோம். படித்துறையின் சில இடங்களில் அகோரிகளை காணமுடிந்தது. ஒரு அகோரி அருகில் சென்று அமர்ந்தேன். என் நண்பனும் அமர்ந்தான். எங்களின் வருகையையோ நாங்கள் அவர் அருகில் அமர்ந்ததையோ பொருட்படுத்தாமல் கங்கையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். உலகே மாயம்.. வாழ்வே மாயம்.. நிலையேது நாம் காணும் சுகமே மாயம்.. வாயில் ஒரு புகைவாங்கி/போக்கி. உள்ளே நிச்சமாய் கஞ்சா போன்ற வஸ்து(?) இருக்கும் என்று என் நண்பன் சொன்னான். நான் அதை பரிசோதிக்க விரும்பாமல் எழுந்து நடையைக்கட்டினேன்.
அந்த படித்துறையிலும் வருங்கால சச்சின்களும் டோனிக்களும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருநதார்கள். அதற்க்கு சற்று தள்ளி ஒரு காதல் ஜோடி விளையாடிக்கொண்டிருந்தது. மாடுகள் கட்டப்பெற்று அதன் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன. அகற்றிவிட்டால் அது காசியே இல்லை என்றான் என் நண்பன். சாய் குடிக்க படித்துறையின் சந்தில் அமைந்த ஒரு கடையில் ஒதுங்கினோம். அப்போதுதான் அந்த கடையில் சாய்அருந்திவிட்டு சிலர் அங்கே படுக்கைவக்கப்பட்டிருந்த சவத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தனர். நான் புத்தகத்தில் இதுபோல படித்திருக்கிறேன். அதை நேரிலே காணும்போது என்னுற் ஏற்படும் அழுத்தம் என்னை ஏதோ செய்தது. மண் குடுவையில் உள்ள சாய்யை உறுஞ்சிவிட்டு கண்ணை மூடினேன். நண்பன் என்னை தட்டியெழுப்பி காசியில் அதுவும் தகனம் செய்யும் இடத்தில் சவ வாடை இருக்காது எனவும் காசியில் காகங்களை காணமுடியாது எனவும புதுத்தகவலைத்தந்தான். ஆம் நான் காசியில் இருந்தவரை ஒரு காகத்தைக்கூட பார்க்கவில்லை. மெதுவாக படித்துறையின் மேலேறி காசியின் வீதிகளில் நடந்தோம். இம்முறை எனக்கு பிடித்தமான பூரி மற்றும் சப்ஜி வாங்கியுண்டேன். சப்ஜி என்னை ஒன்றும் செய்யாது என்னும் தைரியத்தில் மீண்டும சப்ஜிக்காக கையேந்தினேன். நண்பன் நேரமின்மையை குறிப்பிடவும் நான் விடுதிக்கு விரைந்தேன். அங்கே எங்களுக்கு இரயில் நிலையம் செல்ல வாகனம் தயாராக இருந்தது. வேகவேகமாய் விடுதியை காலி செய்துவிட்டு கீழிறிங்கி காசியில் என் காலடித்தடத்தை விடுத்து வாகனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் காசியை விட்டு அகன்று பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்தது. மாலைப்பனிமூட்டத்தில பாலத்தின் மேலிருந்து காசியை பார்த்தேன். படித்துறைகள் மங்கலாக தெரிய தூரத்தில் எரியூட்டப்படும் சிதைகள் தீயசைத்து எனக்கு விடையளித்தன.
நான் ரசித்த காசியின் அழகு உங்கள் பார்வைக்கு. கண்டு களியுங்கள் : http://www.youtube.com/watch?v=u4NOzqeJY-Y