மனிதனைப் போன்ற உருவ அமைப்புடைய ரொபாட் அறிவியல் புனைகதைகளிலும் அறிவியல் திரைப்படங்களிலும் அதிகம் இடம் பெற்று வந்துள்ளது. ஜப்பானில் கார்ட்டூனில் ரொபாட்டைச் சித்தரிக்கையில் நட்பைக் காட்டும் பெரிய கண்களுடனும், அடர்த்தியான முடியுடனும் சித்தரிக்கின்றனர். ஆனால் அமெரிக்காவிலோ டெர்மினேட்டர் பாணியில் மழுங்க மொட்டை அடித்த தலையுடனும் பயத்தை ஏற்படுத்தும் புருவமில்லாக் கண்களுடனும் காண்பிப்பது வழக்கம்.ஆனால் இந்த நூற்றாண்டில் இன்னும் இருபது வருடங்களில் மனித ரொபாட்டை அதாவது இயந்திரனை உருவாக்கி விடுவோம் என்கின்றனர் விஞ்ஞானிகள்!இப்படி ஒரு ரொபாட்டை உருவாக்குவது பெரிய சவால்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை! ரொபாட் என்ற வார்த்தை உருவானது எப்படி?
1923ம் வருடம் காரல் கேபக் என்ற செக்கோஸ்லேவேக்கிய எழுத்தாளர் பிரசித்தி பெற்ற பயங்கரமான ஒரு நாடகத்தை எழுதினார். ஆர்.யு.ஆர் என்று அதற்குப் பெயர். செக் மொழியில் உள்ள ரொபாடா (வேலை) என்பதிலிருந்து பிறந்ததே ரொபாட்! இந்த நாவலில் வேலைக்காரர்கள் அதாவது ரொபாட்டுகள் இயந்திர ராட்சஸர்கள். மனித உருவிலான இவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகின்றனர். இந்த நாவலிலிருந்து பிறந்த இயந்திர மனிதனே ரொபாட்! மனிதனைப் போலவே அனைத்து வேலைகளையும் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டுமானால் மனிதஅமைப்புடையதாகவே ரொபாட்டை , இயந்திரனை வடிவமைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். இந்தத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்று ஏற்கனவே அதிரடிச் சோதனைகளை நிகழ்த்தி விட்ட சைபர்னெடிக்ஸ் துறைப் பேராசிரியர் கெவின் வார்விக், “”மனிதனைப் போலவே இருக்கும் ரொபாட் சீக்கிரமே அனைவரிடமும் பிரசித்தி பெற்று விடுவான்” என்கிறார்.ஏற்கனவே பல்வேறு விரல்களையுடைய ரொபாட் வடிவமைக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வந்து விட்டது. நளினமான விரல் அசைவுகளுடன் செயற்கைத் தசைகளுடன் உருவாக்கப்பட்ட இந்த ரொபாட்டுகளில் தொடு உணர்வுக்கான சென்ஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பல வருடங்களாகக் கடினமாக உழைத்ததன் பலனே இந்த ரொபாட் என்கிறார் வார்விக்.ஆனால் மனித மூளையைப் போலவே இயந்திரனுக்கும் ஒரு மூளை அமைக்கப்பட வேண்டும். செயற்கை அறிவு ஊட்டப்பட வேண்டும்!இது சாத்தியம்தான் என்பதை 1997ல் நடந்த நிகழ்ச்சி ஒன்று நிரூபித்து விட்டது! உலகின் பிரபல முன்னணி செஸ் மாஸ்டரான கேரி கேஸ்பரோவுடன் விளையாட ஐ.பி.எம். நிறுவனம் வடிவமைத்த “டீப் ப்ளூ’ என்ற ரொபாட் தானாகச் சிந்தித்து ஒரு காயை நகர்த்தி விட்டது. விஞ்ஞானிகள் சொல்லாத இந்தச் செயலை டீப் ப்ளூ செய்ததால் உலகமே பரபரப்புக்குள்ளாகி விட்டது.
ஆனால் இந்த “காக்’ இரண்டு வயதுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியைக் கூட இன்னும் அடைந்தபாடில்லை.சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் இன்னொரு முறையைக் கையாண்டு ஜான் ஹாலந்த் என்பவர் ரொபாட்டை உருவாக்க ஆரம்பித்தார். டார்வினின் பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் இரண்டு குரோமோசோம்கள் போன்ற கணிணிகளில் புரோகிராமை உருவாக்கினார். இவை இரண்டும் இணைந்து புதிய குழந்தையாக ஒரு புரோகிராமை உருவாக்க, இப்படிப் படிப்படியாக ரொபாட் கற்க வேண்டியதைத் தானாகவே கற்று விடும் என்று அவர் தனது கொள்கையை உருவாக்கினார்.
1984ல் டக்ளஸ் லெனட் என்னும் விஞ்ஞானி ரொபாட்டிடம் பொது அறிவை ஏற்படுத்தப் புதுமையான முயற்சி ஒன்றைச் செய்தார். அதாவது தர்க்க ரீதியிலான அடிப்படை உண்மைகளைத் தொகுத்து அவற்றை அவர் ரொபாட்டிற்குக் கற்பிக்க முனைந்தார். உதாரணமாக, “ஒரு பொருள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது,’ “மழை பெய்யும் போது நின்றால் நனைய வேண்டியதுதான்’ இப்படி சுமார் நூறு லட்சம் சாமான்ய அறிவுத் தொகுப்பை அவர் தொகுத்தார். இதற்குப் பல கோடி “பிட்ஸ்’ கணிணியில் தேவைப்படுகிறது. இன்னும் பத்துக் கோடி உண்மைகளை அவர் தொகுத்து வருகிறார்!
ஆனால் சிக்கலான மனித மூளை கோடானு கோடி நியூரான் இணைப்புகளை உடையதாக இருக்கிறது! ஒரு நியூரானுடன் இன்னொரு நியூரானுக்குச் சராசரியாகக் குறைந்த பட்சம் சுமார் ஆயிரம் தொடர்புகள் உள்ளன. கோடானு கோடி நியூரான்களிடையே எத்தனை கோடி இணைப்புகள் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியாது!
பிரம்மாண்டமான ரொபாட் ஒன்று அமைக்கப்படுமானால் ஒரு வினாடிக்கு நூறு கோடி தகவல்களை அது அலசிப் பார்க்க முடியுமென்று வைத்துக் கொண்டால் மனித மூளை இதை விட ஆயிரம் மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுகிறது!
இந்த அளவு வேகம் உடைய ரொபாட்டை 2020ம் ஆண்டு வாக்கில் உருவாக்க முடியும் என்கிறார் செயற்கை அறிவுத் துறையில் வல்லுநரான ரேகர்ஞூவெய்ல் என்னும் விஞ்ஞானி.சரி, மனிதனுக்கு உள்ளது போன்ற பிரக்ஞையையும் உணர்ச்சிகளையும் ரொபாட்டிடம் உருவாக்குவது எப்படி? “”மனித மூளையைப் போலவே அமைக்கப்பட்டால்தான் மனித பிரக்ஞை மற்றும் உணர்ச்சிகளை ரொபாட்டிடம் உருவாக்குவது சாத்தியம்” என்கிறார் வார்விக்.
ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள பொம்மை ரொபாட்டுகள் சிரிக்கின்றன; அழுகின்றன!ஆனால் தனது லட்சியங்களைப் பிரக்ஞை மூலம் நிர்ணயிக்க மனிதனால் முடியும். சுற்றுப் புறச் சூழ்நிலைக்கு ஏற்ப அவனது உணர்ச்சிகள் மாறுபடுகின்றன. இவற்றை ரொபாட்டிடம் உருவாக்குவது மிகவும் கடினம் என்றாலும் 2050ம் ஆண்டு வாக்கில் அப்படி ஒரு முயற்சி வெற்றி பெறும் என்கிறார் வார்விக்.
பதினெட்டு ஆண்டுகளாக டெட்சுவன் அடோமு என்ற ரொபாட் ஜப்பானில் காமிக்ஸ் புத்தகங்களில் சித்தரிக்கப் பட்டுப் பெரும் வரவேற்பையும் புகழையும் பெற்று விட்டது. இது மனித குலத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு ராட்சஸர்கள், கொடியோரிடமிருந்து மனித குலத்தைக் காப்பாற்றி அமைதியை நிலை நாட்ட உதவும் கற்பனைக் கதாபாத்திரம்.
இதைப் போலவே மனித குலத்திற்கு நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் இப்போதுள்ள மின் விசிறி, மின் சலவைப் பெட்டி, மைக்ரோ அடுப்பு போல ரொபாட்டும் உதவும் நாள் வெகு தூரத்தில் இல்லை! மனிதனுடன் உறவாடி அவன் இடும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றும் இயந்திரன் உருவாகி வீட்டில் வளைய வரும் போது மனித குலத்தில் ஒரு புதிய பரிமாணம் உருவாகி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்!
அந்த நாளை உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!
—————————————————————————————————————————-
-
ஒரு மாதம் கழித்து படம்பார்த்துவிட்டு வந்து விமரிசனம் எழுதினால் பதிவுலகில் கும்மி விடுவார்கள் என்று தம்பி தனிக்காட்டு ராஜா ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார் என்பதை நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்…
-
ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. எந்திரன் என்ற தமிழ் சொல் சரியா அல்லது இயந்திரன் என்ற தமிழ் சொல் சரியா?… (இரண்டு வரிக்கு மிகாமல் விடையை பின்னூட்டமிடுக)
-
காதல் அணுக்கள் பாட்டு இப்போ சூப்பர் ஹிட் என்று என் நண்பன் ரஜினிராஜ் கூறியது முற்றிலும் சரியே..(படம் ரிலீசுக்கு முன்ன கேட்டதவிட.. இப்போ கேட்கும்போது நல்லாத்தானே இருக்கு.. உண்மைய சொல்லுங்க..)
-
இதே ரோபோ மேட்ர வச்சி என் நண்பன் கிட்ட நா ஒரு கதய சொன்னேன்.. அப்ப ஓடினவன்தான் இன்னும் ஊரு திரும்பல.. (நண்பேன்டா…)
-