கும்முக்கி – ஒரு காகப்பார்வை

A-still-from-Kumki

நரி காகத்தினை பார்த்து ‘காக்கா… காக்கா.. (கக்கா.. கக்கா என்று படித்து வைக்காதீர்கள்) நீ ரொம்ப அழகா இருக்கே… ஒரு பாட்டு பாடேன்’ என்றது. காக்கையும் நரியின் புகழ்ச்சியில் மயங்கி ‘கா.. கா..’ என்று பாட துவங்கியது.  அப்போது காகத்தின் வாயிலிருந்த வடை நழுவியது.

இந்த ஸீன் இங்கே நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அங்கே பாட்டி தான் சுடுகின்ற வடை கருகிக்கொண்டிருப்பது கூட தெரியாமல் வடை சுட்டுக்கொண்டிந்தாள்.  

ஜிம்மி ஜிப் கேமரா கோணத்துல கீழே வர்ர இந்த ஸீனை நினைச்சிப்பருங்க…

மரத்தின் உச்சிக்கிளையில்  காகம் பாட்டுப்பாடிக்கொண்டிருக்கிறது.. (அங்கிருந்து கேமரா ஸ்ட்ராட்)

காகம் வாயிலிருந்து நழுவிய வடை மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருக்கிறது….  (கேமரா வடை கூடவே ட்ராவல்)

நரியும் தன்னை நோக்கி கீழே விழுந்துகொண்டிருக்கும் வடையை மேலே நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. (கேமரா ஃபாலிங்)

‘தொப்’ , ‘தொபுகடீர்’ , ‘பட்’, ‘பட்டென்று’, ‘டம்’, ‘டமால்’…..என்று உங்களுக்கு பிடித்த ஒரு சவுண்டை செலக்ட் செய்து கொள்க.

ஒரு சரியான ஷணத்தில் மேலிருந்து கீழே விழுந்த வடையானது நரியின் உச்சந்தலையில் விழ (செலக்டட் சவுண்ட்…) நரியும் பட்டென்று சாய்ந்துவிட்டது.  வடை விழுந்ததால் நரியின் தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் குபு குபுவென கசிய, நரியின் தலையைச்சுற்றி ரத்தம் தரையில் படர்ந்துகொண்டிருந்தது.

இதை பார்த்த காகமோ சட்டென்று மரத்திலிருந்து கீழிறங்கி(?) வந்து நரியினை தொட்டுப்பார்க்க நரி கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருப்பதை அது உணர்ந்தது.

இந்த இழவு தன்னால் தானே நிகழ்ந்தது என்று எண்ணி கலங்கி கண்ணீர் விட்டு, காகம் கனத்து அழுதது.

அழுகை அடங்கியதும் தான் பாட்டியிடமிருந்து சுட்ட வடைக்காக, வடை சுட்ட பாட்டியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று பாட்டியிடம் சென்று…. 

‘ ஐயகோ  என்ன கொடுமை’….  அங்கே பாட்டி கரு(க்)கியிருந்தாள்.

 

‘திம்’…. யாரோ ஓங்கி என் முதுகில் மிதித்ததை என்னால் உணர முடிந்தது…

‘வீணாப்போனவனே… போனாப்போவுதுன்னு காணமப்போயிருந்த உன்ன கூட்டியாந்து இங்க உட்டா… நீ கும்கி படத்தையே கலாய்க்கிறியா…  இப்ப உன்ன குமுக்கி எடுக்கிறேன் பாரு……’

 

Published in: on திசெம்பர் 28, 2012 at 5:20 முப  Comments (1)  

தடாக மலையும்… தாடகை மலையும்…

கிரகம் சுத்திச்சுத்தியடிக்கும் என்பார்கள். எனக்கும் அப்படித்தான் நடந்தது. புத்தக கண்காட்சிக்கு செல்ல ஆசை. ஆனால் அதற்க்கு  ஒதுக்கப்பட்ட நேரம் ஒரு மணிநேரமென்றால் நீங்களாய் இருந்தால் ஒத்துக்கொள்வீர்களா. ஆனால் நான் ஒத்துக்கொண்டேன். சகதர்மினியோடு (தமிழ் சரிதானே?..) ஒரு ஷாப்பிங் போகவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது ‘அப்படியே புக் ஃபேர் போயிட்டு வரலாமா?.’ என்றேன்.  ‘முதல் ஷாப்பிங் போவோம்.. அப்புறம் டைம் இருந்திச்சுன்னா போகலாம்’ என்றாள். ‘இல்ல நாளையோடு புக் ஃபேர் முடியுதாம்.. அதனால ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்.. ’ என்ற என் ஆதங்கத்தை புரிந்தவளாய்.. ‘சரி.. சரி.. ஒரு ஒரு மணி நேரம்னா நானும் வரேன்..’ என்றவளிடம் பதிலேதும் பேசாமல் புறப்பட்டேன். வாங்கியதென்னவோ இரு பொருள்கள் என்றாலும் அதற்க்கே ஒரு மணிநேரமானது. பின் விரைவாக புக் ஃபேர் விரைந்தோம். வண்டியில் அமர்ந்தபடியே புக் ஃபேருக்கான ஒரு திட்டம் வகுத்தேன். நேராக உயிர்மை ஸ்டால்.. அப்புறம் கிழக்கு.. அப்புறம் ஆண்டவன் விட்ட வழி என முடிவுசெய்தேன். என் சகதர்மினியின் (மீண்டும் கேட்கிறேன் என் தமிழ் சரிதானே?…) இலக்கிய ஆர்வத்தினை தூண்டும் விதமாக ‘நீ எந்த மாதிரியான புத்தகங்களை வாங்க விரும்புவாய்? என்றேன் அன்பாக. ‘அது கிடக்கட்டும்..  போனமோ வந்தமோன்னு இருக்கணும்… வீட்டுல சின்னவ அழ ஆரம்பிச்சுட்டா அவ்வளவுதான்..’ என்று என் இலக்கிய ஆர்வத்தில் கல்லெறிந்தாள். புத்தகத்திருவிழா நடக்கும் அரங்க வாயிலை அடைந்தோம்.  பொங்கல் விடுமுறையாதலால் நல்ல கூட்டம். வண்டியை நிறுத்திவிட்டு நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்தோம்.

திக்குத்தெரியாமல் நின்றுகொண்டிருந்த எங்களுக்கு ஒருவர் உதவினார்.  ‘என்ன புத்தகம் வாங்க போறீங்க’ என்றவளுக்கு ‘இன்னும் முடிவு செய்யல’ என்றபடி அவளையும் இழுத்துக்கொண்டு உயிர்மையைநோக்கி ஓடினேன். உள் நுழைய முடியாதபடி கூட்டம். என்னவள் வெளியிலே நிற்க நான் சிரமப்ட்டு உள் நுழைந்து சாருவையும், மனுஷ்ய புத்திரனையும் தேடினேன். அவர்களுடைய நல்ல நேரமோ என்னமோ தெரிய வில்லை அவர்கள் அங்கில்லை. என்னுடைய தேடல் சாருவின் புத்தகங்களில் இருந்து துவங்கியது. தேடினேன்… தேடினேன்… தேகத்தை தேடினேன்… ‘இன்னும் முடியலையா’ இது என் மனைவி. ‘வந்துட்டேன்’ என்று வெறும் கையுடன் திரும்பினேன். அடுத்தது கிழக்கு பதிப்பகம். நிறைய புத்தகங்கள். என் மனைவியும் ஆவலாய் புத்தகங்களை பார்வையிட்டாள். நான் ராகவன் சார் அங்கில்லை என்றதும் வெளியே வந்துவிட்டேன். அதற்க்குள் என் மனைவி மூன்று சமையல் சம்பந்தமான புத்தகங்களை தேர்ந்தெடுத்துவிட்டு பில் போடுவதற்க்கும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். ‘சரி வாங்க போகலாம்’ என்றாள். எனக்கு அழுகையாக வந்தது. புத்தக கண்காட்சியில் சில பல எழுத்தாளர்களை பார்க்கலாம் பேசலாம் என்று வந்தால் அது நிறைவேறாது போலும என்று என்னை நான் நொந்தபடி என் மனையாளின் பின் நடந்தேன். திடீரென்று ஒரு தரிசனம்.  ஆம் அவரேதான். சாகித்ய அகாதமி விருதுபெற்ற திரு. நாஞ்கில் நாடன் அமைதியாய் தமிழினி ஸ்டாலின் முன் அமர்ந்திருந்தார். முதலில் நான் அவரை பார்த்துவிட்டு கடந்தும் விட்டேன். பின் என்ன தோன்றியதோ என் மனைவியை அழைத்துக்கொண்டு அவரருகே சென்றேன். என்னைப்பார்த்து புன்னகைத்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.   பின் அவருக்கு சாகித்ய அகாதமி விருதினை பெற்றுத்தந்த படைப்பான ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தினை வாங்கி அவரின் கையெழுத்திற்காக அவரிடம் நீட்டினேன். ‘நட்புடன் நாஞ்சில் நாடன்’ என கையொப்பமிட்டு அன்ற தேதியையும் அதில் குறிப்பிட்டார்.  என் மனைவி யார் இவர் என வினவ.. என்னுடைய இலக்கிய அறிவை அவளுக்கு தெரிவிக்கும் விதமாய் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல்..(இரண்டு இலக்கியவாதிகள் பேசும்போது குறுக்கே.. ம்..)  நாஞ்சில் அவர்களைப்பார்த்து ‘ சார் உங்களை திரு. ஜெயமோகன் அவர்களுடைய வலைத்தளத்தின் மூலமாய் அறிந்து கொண்டேன். அவர் உங்களைப்பற்றி நகைச்சுவை கலந்து ‘தடாக மலையடிவார்த்தில் ஒருவர்’ என எழுதியுள்ளதை நான் பலமுறை படித்திருக்கிறேன்’ என்றேன் மிக பெருமிதத்தோடு. நாஞ்சிலார் மெல்ல புன்னகைத்து விட்டு ‘அது தடாக மலையில்லை.. தாடகைமலை..’ என்றார்.

வரும் வழியெல்லாம் என் மனையாள் அடிக்கடி சத்தமாய் சிரித்துக்கொண்டே வந்தாள். ஏனென்று தெரிய வில்லை. வீடு வரை நான் எதுவும் பேசவில்லை.  வீட்டிற்க்கு வந்த உடன் ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்தை எடுத்து என் மேசையின் மேல் வைத்தேன். இப்போது நாஞ்சில் நாடனும் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

Published in: on ஜனவரி 18, 2011 at 12:00 பிப  Comments (6)  

நொந்தலாலா…

இன்றைக்கு எப்படியும் பார்த்துவிட வேண்டும். சாநியும் ஜெமோவும் ரொம்ப சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். படம் வெளிவந்து ஒரு வாரமே ஆன  நிலையில் படத்தினைக்காண ஆவலாய் ஆயத்தமானேன். ஆயத்தம் என்று சொன்னால் அப்படி இப்படியில்லை. என்னுடைய முழுநாள் வேலையை அரைநாளில் முடித்துவிட்டு நிறுவனத்தின் முதல் பேருந்து புறப்படும் நேரத்திற்க்காக கவுண்டவுன் முறையில் காத்திருந்தேன். ஆனால் யார் செய்த செய்வினையோ என்னுடைய அலுவலகத்திலிருந்து நான் சீக்கரிமாகவே புறப்படவேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் என்னுடைய பாஸ் என்கிற பாஸ்கரன் என்னை உள்ளே அழைத்தார். (சத்தியமா என் பாஸ் பெயர் பாஸ்கரன்தான்.. ம்.. நம்புங்க…) மிஸ்டர்.. நாளைக்கு ஃபாரின் விசிட்டர்ஸ் வராங்கன்னு சொன்னேனில்லயா.. அதற்கான ஏற்பாடுகளை செஞ்சாச்சா?.. என்று சற்றே உரத்த சொனியில் வினவ நான் வேகமாக ‘ஆச்சு சார்’ என்று மறுமொழிந்தேன். ‘மண்ணாங்கட்டி’ என்றார். இதை நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. ‘வெல்கம் போர்டுல என்னய்யா லெட்டர்ஸ் ஒட்டியிருக்கே.. நான் கேணல் திரு.. என்று போடச்சொன்னா கேண திரு..ன்னு போட்டிருக்கே..’ என்று மொழிய நான் எந்த போர்டு என்று கேட்க நினைத்து பின் சுதாகரித்துக்கொண்டு ‘நான் பார்த்து சரி பண்ணிடறேன் சார்’ என்று சொல்லியபடி பின்வாங்கி கோபமாய் என் சகாவைத்தேடினேன். ‘என்னப்பா பேயறஞ்சா மாதிரி வெளியே வரே..’ என்றபடியே எதையோ எடுத்து தனது வாயில் போட்டபடி என்னைப்பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தான் சகா. ‘டேய் உன்னுடைய பொறுப்புதானே நேம் போர்ட் கிரியேஷன்’ என்றேன். ‘யெஸ்.. ’ என்றான். ‘பாவி நீ பண்ண தப்புக்கு என்ன கூப்பிட்டு திட்டறான் அந்த லூசு’ ‘நேம் போர்டுல கேணல் என்பதற்கு பதிலா கேண என்று போட்டிருக்கியாமே..’ என்று கடிந்தேன்.   ‘அந்த லூசு சொல்லுதுன்னு இந்த லூசு வந்து நிக்குது..’ என்று முனகியவனை ‘என்ன உனக்குள்ளேய பேசிக்கற’ என்றேன். ‘கேணல்..ல  ‘ல்’ காணாம் அவ்வளவுதானே. ஒட்டிட்டாப்போச்சு..’ என்றான் கூலாக. நான் அவனை வைய வாயெடுப்பதற்குள் மீண்டும் பாஸ்கரன் கூப்பிட்டார்(ன்).

‘மிஸ்டர்.. எல்லாத்தையும் வெரிபை பண்ணிட்டு எனக்கு கன்பார்ம் பண்ணிட்டுத்தான் இன்னைக்ககு நீங்க புறப்படணும்..’ என்று எனக்கு கட்டளையிட்டு விட்டு அவர்(ன்) புறப்பட்டுக்கொண்டிருந்தார்(ன்). நான் பார்த்து வளந்த பய .. ஹ்ம்.. எல்லாம் காலத்தின் கட்டாயம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பாஸ்கரன்  எனைப்பார்த்து ‘மிஸ்டர்.. என்ன யோசிக்கிறீங்க.. நான் கன்பார்ம் பண்ணச்சொன்னது என்னுடைய மொபைல்ல.. அண்டர்ஸ்டேண்ட்..’ என்று சொல்லியபடி விருட்டென்று எழுந்து சென்றான்.  பாஸ் என்கிற பாஸ்கரன்  யாரையாவது கார்னர் செய்கிறான் என்றால் அதில் ஏதாவது ஒரு உள்குத்து இருக்கிறது என்று அர்த்தம். ஒரு முறை சகா பளிச்சென்று நல்ல விலையுயர்ந்த சர்ட் அணிந்து வர அது பாஸ்கரன் கண்ணை உறுத்த அன்றைக்கு சகா பட்ட பாடு இருக்கிறதே… அப்பப்பா… சொல்லி மாளாது.. அன்னைக்கு சகா அவன் சர்ட்டுல அவனே வலிய தேனீர் ஊற்றி கறைபடுத்திக்கொண்டு பாஸ்கரன் முன்னால் போய் நின்ற போதுதான் பாஸ்கரன் அமைதியானான். (உங்க ஆபீஸ்ல கூட இப்படித்தானுங்களா?…). இப்பொழுது பாஸ்கரன் மனம் நோகும்படி நான் என்ன செய்தேன்… கடவுளே எனக்கு விளங்கச்செய் என்று என்னையே நான் நொந்தபடி செக்லிஸ்டை எடுத்துக்கொண்டு சகாவின் உதவியை கூட எதிர்பாராமல் விருவிருவென என் வேலையை(?) துவங்கினேன்.

வெல்கம் போர்ட் வெரிபிகேஷன் (ஆப்டர் தி ஒட்டிங் ஆப் தி லெட்டர் ‘ல்’), பொக்கே மற்றும் சந்தனமாலை ஆர்டர்.. டீ ட்ரேவில் வைக்கவேண்டிய யுடென்ஸில்ல்.. டீ.. (ஹெர்பல் டீயாம்.. அந்த கருமத்த எப்படித்தான் குடிக்கிறான் இந்த பாஸ்..) மில்க்.. பாரின் பிஸ்கட்ஸ்..  , கான்பரஸ் ஹால் ஸ்ப்ரே அண்டு ஹவுஸ் கீப்பிங் என்று சரிபார்த்ததோடு மட்டுமால்லாமல் ரிசப்ஷனிஸ்ட் கேரளாடைப் சாரி கட்டிக்கொண்டு வரவேண்டும் என்பது வரை உறுதிசெய்துவிட்டு வேகவேகமாய் என்னுடைய நிறுவன பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ‘என்ன சார் இன்னைக்கு லேட்டு’ என்றது பக்கத்து சீட்.  ‘வேலப்பா..’ என்று வேலை என்ற சொல்லுக்கே வேலை என்று அர்த்தம் கற்பித்துவிட்டு ஆசுவாசமாய் நந்தலாலாவைப்பற்றி சிந்ததிக்கத்தொடங்கினேன்.

மிஷ்கின். ஒரு அற்புதமான டைரக்டர். ஆனால் இதுவரை நான் அவருடைய படங்களை பார்த்ததில்லை. பின் எப்படி அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்றால் இணையத்தில் அவரைப்பற்றி சேகரித்த செய்திகளை வைத்துத்தான். சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே திரைவிமர்சனங்களை படித்தபின்பு அவருடைய களங்கள் வித்தியாசமானது என்பதை நான் அறிந்து(?) கொண்டேன். ஆனால் அவருடைய படைப்பான நந்நலாலாவில் ஒரு வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் அதுவும் மிஷ்கினே மனநலம் குன்றியவராக நடிக்கவும் செய்துள்ளார் எனும்போது என் ஆவல் கூடவும் மேலும் பல விமரிசனங்கள் படத்தினை தூக்கியும் சில விமரிசனங்கள் படத்தினை தாக்கியும் இணையத்தில் வந்ததால்  கண்டிப்பாக படத்தினை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தினை தூற்றிய பலராலும் காப்பி என்று சொல்லப்பட்ட அல்லது தழுவல் என்று அறியப்பட்ட நந்தலாலா ஜப்பான் பதிப்பை(?) யூடிபில் அரசல் புரசலாக பார்த்துவிட்டதிலிருந்து(?)  ஒரு வாரம் காத்திருந்தது தவறு என்று எனக்கு பட்டதால் படத்தினை அன்றே உள்ளூர் திரையரங்கில் காண முடிவுசெய்தேன்.  முடிவெடுத்தலில் தவறில்லை. ஆனால் எடுக்கப்பட்ட நாள் எனக்கு சரியான நாளில்லை என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.

வேகவேகமாய் வீடு சென்ற நான் ‘சினிமாவுக்கு போறேன்’ என்றேன் மொட்டையாக. ‘எப்ப’ என்ற கேள்விக்கு பதிலாய் ‘10 மணிக்கு’ என்றேன். ‘வேண்டாம்.. மழ வர மாதிரியிருக்கு..’ என்ற ஆணவ பேச்சுக்கு பதிலாய் ‘கண்டிப்பா இன்னிக்கு நா பாத்தேயாகணும்..’ என்றேன். ‘அப்ப.. இன்னிக்கு டின்னரு உங்களுக்கு தேவை இல்ல.. ம்.. அப்பபுறம்.. என்ன படம்’ என்ற அலட்சிய கேள்விக்கு ‘நந்தலாலா’ என்றேன். ‘க்ளுக்’ என்ற சிரிப்பொலிக்கு ‘என்ன சிரிப்பு’ என்றேன். ‘ஒண்ணுமில்ல..  போய்ட்டு வாங்க’ என்ற நக்கலுக்கு பதிலளிக்காமல் வீட்டை விட்டிறங்கி திரையரங்கை நோக்கி வேகமாய் சைக்கிளை மிதித்தேன். வழக்கத்தைவிட சைக்கிள் மிக மெதுவாய் சென்றது. காரணத்தை அறியும் ஆவல் அப்போது என்னிடம் ஆர்பரிக்காததால் நான் என் முழு திறனையும் உபயோகித்து வேகமாய் சைக்கிளை மிதித்தேன். ஒரு வழியாய் திரையரங்கின் நுழைவாயிலை அடைந்து விட்டேன். தியேட்டரின் விளம்பர சுவற்றில் மிஷ்கின் தனது ஒருகையால் பள்ளிச்சிறுவன் ஒருவனின் கையையும் மறுகையால் தான் அணிந்திருந்த பேண்ட் நழுவாமலும் பிடித்துக்கொண்டு என்னை உற்றுப்பார்த்தார். நான் அவருடைய பார்வையை தவிர்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். கூட்டம் இல்லை என்று சொல்வதைவிட கூட்டமேயில்லை என்று சொல்வதுதான் சரி. மணியை பார்த்தேன். சரியாக இரவு 9. 30.  தியேட்டரின் வாகன நிறுத்துமிடத்தில் என் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். என் சைக்கிளைத்தவிர வேறு எந்த வாகனமும் இல்லை. சற்று முன்கூட்டியே வந்துவிட்டேனோ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது ‘என்ன சார்.. டோக்கனா’ என்றபடி ஒரு பையன் என்னைப்பார்த்து வந்து கொண்டிருந்தான். பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுக்கும் முன் பையன் எனைப்பார்த்து ‘ இன்னா படம் சார்’ என்றான். ‘நந்தலாலா’ என்றேன்.  ‘நீங்க பத்து மணிக்கு வந்து டோக்கன் போட்டுக்குங்க சார்’ என்றபடி என் பதிலை எதிர்பாராதவனாய் அரங்கதின் வாயிலை நோக்கிச்சென்று கொண்டிருந்தான். நான் என் சைக்கிளை பூட்டி விட்டு மெதுவாய் நடந்து சென்று திரையரங்கின் வெளிவாசலை அடைந்தேன்.

திரையரங்கின் எதிரே டாஸ்மாக் தனது அன்றைய நாளின் இறுதிகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது. மிதமான கூட்டம் மிதந்து கொண்டிருந்தது. ஹ்ம்.. கல்யாணத்துக்கு முன்னே இருந்த சுதந்திரம் இப்போது எனக்கிருந்தால்.. இந்நேரத்தில் நாள் உள்ளே இருந்திருப்பேன்.. என்று நான் பெருமூச்சுவிடவும் பக்கத்திலிருந்த நாய் என்னைப்பார்த்து குரைக்கவும் சரியாக இருந்தது. தனியா நிக்கறது தப்பா என்று நாயினை முறைத்துவிட்டு அதன் குரையினை பொருட்படுத்தாது இருண்ட வானத்தை அண்ணாந்து பார்த்தேன். மேலேயிருந்து மழைச்சிதறல்கள் பூச்சிதறல்களாய் என் முகத்தை முத்தமிட்டன. மனம் சிறகாய் பறந்தது. அதை இன்னும் சற்று உயரத்தில் பறக்கவைக்க எண்ணி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு டாஸ்மாக்கினுள் நுழைந்தேன் (ஒரு ரெண்டு மணி நேரத்துல சரக்கு வாசன நம்ம கிட்டயிருந்து போயிடாது?). லைட்டாக ஒரு மீன்கொத்திபறவையினை வாங்கிக்கொண்டு மணியைப்பார்த்தேன். சரியாக 9.50. வேகவேகமாய் பாட்டிலை காலிசெய்துவிட்டு நிமிர்ந்தேன். எனக்கெதிரே சற்று தொலைவில் டோக்கன் பாய் சரக்கடித்துக்கொண்டிருந்தான். நான் அவனை அணுகி ‘தம்பி டோக்கன் போட வரலியா?’ என்றேன். அவன் கடுப்புடன் எனைப்பார்த்து ‘டோக்கன் எல்லாம் கிடையாது.  போய் முதல்ல டிக்கட் கிடைக்குதான்னு பாருங்க’ என்றான். ஆஹா.. எல்லாம் அட்வான்ஸ் புக்கிங்கா.. என்று மனசுக்குள் நினைத்தபடி தியேட்டரின் டிக்கட் கவுன்டரை (கவுண்டர் என தவறாக படிக்காமல் ‘என்கவுன்டரில்’ வருமே அந்த கவுன்டர் போல வாசிக்கவும்)  நோக்கி விரைந்தேன்.

டிக்கட் கவுன்டரில் ஆளும் இல்லை வரிசையும் இல்லை. இதே இடத்தில் போன மாதம் எந்திரனுக்கு வரிசையில் நின்று டிக்கட் வாங்கியது எனக்கு நினைவுக்கு வந்தது. உள்ளே எட்டிப்பார்தேன். விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது.  மணியைப்பார்த்தேன். சரியாக 10. ‘என்னா வேணும் சார்’ என்ற குரல்கேட்டு திரும்பினேன். பேண்ட் சர்ட் அணிந்து கையில் ஒரு சின்ன பெட்டியுடன் ஒருவர் (இந்த நேரத்தில் எந்த பேங்க் திறந்திருக்கும்) என்னை பார்த்து நடந்துவந்துகொண்டிருந்தார்.  ‘நந்தலாலா டிக்கட்’ என்றேன் தயக்கத்துடன். அவர் சாவகாசமாய் என்னருகே வந்து நின்று ‘சார் கலைப்படங்களை விரும்பி பாக்கறவரு போலிருக்கு’ என்றார். ‘ஆம்’ என்றேன். அமைதியாக.  ‘உங்களையும் சேத்து மொத்தம் மூணுபேர் மட்டுமே நந்தலாலாக்கு வந்திருக்கிறதால நாங்க ஷோவ இன்னிக்கு ரன் பண்ண முடியாத நிலைமையில் இருக்கோம்.. மன்னிச்சுக்கோங்க’ என்ற படி நகர முயன்றார். ‘என்ன சார் இது இப்படி பண்ணறீங்களே’ என்று நான் கேட்க அவர் சற்று நிதானமாய் ‘மூணு பேருக்காக படத்த ஓட்ட முடியுமா.. எங்களையும் நீங்க பாக்கணும்.. புரிஞ்சிக்கோங்க..’ என்றபடி திரையரங்கின் உள்சென்று கதவையடைத்துக்கொண்டார். நான் வெளியே பார்த்தேன். இப்போது மழையை என்னால் ரசிக்க முடியவில்லை.  மெதுவாய் நடந்துவந்து என் சைக்கிளை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு வெளியே வந்தேன். சைக்கிளை தள்ளுவதே சிரமமாய் இருந்தது.  சைக்கிளை நிறுத்தி பார்வையிட்டேன். புரிந்தது. முன் சக்கரம் பங்ஞ்சர். என்னை நானே நொந்தபடி சைக்கிளை தூறும் மழையில் தள்ளிக்கொண்டு நடந்தேன். இரவு நேர சாலை வாகனங்கள் என்மேல் சேற்று சிதறல்களை பூவாய்(?) தூவியபடி பறந்துகொண்டிருந்தன.  நான் சாலையின் இடது ஓரமாய் நடந்துகொண்டிருந்தேன். சாலையின் எதிர் முனையில் சாலையோர விளக்கு கம்பத்தின் கீழே ஒரு உருவம் நின்றுகொண்டு விளக்கு கம்பத்தின் மேலே இருந்த விளக்கினை பார்த்து கடுமையான வார்த்தைகளால்  திட்டிக்கொண்டிருந்தது. அருகில் ஒரு நாய் அதை சத்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தது (இதுதான் என்னைப்பார்த்து குரைத்த நாயோ?..). நான் சைக்கிளை தள்ளிக்கொண்டே அந்த உருவத்தைப்பார்த்தேன்.  முகம் பளபளவென்று வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது.  செக்கியூரிட்டி அணிவது போன்ற ஒரு வெளிர் நீல சர்ட்டும், சர்ட்டில் தொங்கும் ஒரு ஊதலும்,  கருமை நிறம் என்று சொல்ல முடியாத கருமையான நிறத்தில் ஒரு அளவில்லாத பேண்டும் அணிந்து கொண்டு அந்த பேண்ட் தரையில் விழுந்து விடாதபடி தனது ஒரு கையால் அதை கெட்டியாக பிடித்தபடி அந்த உருவம் நின்று கொண்டிருந்தது. சமீபத்தில்தான் அதன் தலை மொட்டையடிக்கப்பட்டிருக்க வேண்டும் என தோன்றும் வகையில் அதன் தலையில் முடியிருந்தும் இல்லாது போன்ற ஒரு நிலை. நான் அது மன்னிக்கவும் அவனை பார்த்தேன். அவன் நிற்பதும் துள்ளுவதுமாக யாரையோ ஏசிக்கொண்டிருந்தான். நான் இப்போது நின்றுவிட்டிருந்தேன். வயிற்றில் இருந்த மீன்கொத்தியின் வாசனை இப்போது என் தொண்டையின் வழியாக ஏப்பமாக வெளிவந்தது. இப்போது அவன் ஏசுவதை நிறுத்திவிட்டு என்னை உற்றுப்பார்த்தான். ஆஹா தேவையில்லாமல் நாம் எதிலும சிக்கிக்கொள்ளக்கூடாது என சட்டென்று என் சைக்கிளில் ஏறி அது பங்ஞ்சர் என தெரிந்தும் வேகமாக சவட்டினேன். சிறிது தூரம் வந்து சைக்கிளை நிறுத்தி என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மனிதனின் படைப்புளில்தான் எத்தனை விதம். பாவம் அவன். அவன் பிறக்கும் போது அவன் தாய் எவ்வளவு ஆனந்தப்பட்டிருபபாள்.  மீண்டும் நந்தலாலா நினைவு.  மிஷ்கின் என்னை பார்த்ததை நான் நினைத்துப்பார்த்தேன்.  ஒரு கலைப்படம் எடுத்துப்பிழைப்பது எவ்வளவு கடினம் பார்த்தாயா? என்று அவர் என்னை கேட்பது போல எனக்கு தெரிந்தது.  ‘பளீர்’ ஒரு மின்னல் தாக்கிய உணர்வு. நான் அந்த விளக்கு கம்பத்தின் அடியில் பார்த்தது.. அது ஒரு வேளை….

Published in: on திசெம்பர் 7, 2010 at 10:20 முப  Comments (14)  

இயந்திரன்… ஒரு பார்வை…

மனிதனைப் போன்ற உருவ அமைப்புடைய ரொபாட் அறிவியல் புனைகதைகளிலும் அறிவியல் திரைப்படங்களிலும் அதிகம் இடம் பெற்று வந்துள்ளது. ஜப்பானில் கார்ட்டூனில் ரொபாட்டைச் சித்தரிக்கையில் நட்பைக் காட்டும் பெரிய கண்களுடனும், அடர்த்தியான முடியுடனும் சித்தரிக்கின்றனர். ஆனால் அமெரிக்காவிலோ டெர்மினேட்டர் பாணியில் மழுங்க மொட்டை அடித்த தலையுடனும் பயத்தை ஏற்படுத்தும் புருவமில்லாக் கண்களுடனும் காண்பிப்பது வழக்கம்.ஆனால் இந்த நூற்றாண்டில் இன்னும் இருபது வருடங்களில் மனித ரொபாட்டை அதாவது இயந்திரனை உருவாக்கி விடுவோம் என்கின்றனர் விஞ்ஞானிகள்!இப்படி ஒரு ரொபாட்டை உருவாக்குவது பெரிய சவால்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை! ரொபாட் என்ற வார்த்தை உருவானது எப்படி?

1923ம் வருடம் காரல் கேபக் என்ற செக்கோஸ்லேவேக்கிய எழுத்தாளர் பிரசித்தி பெற்ற பயங்கரமான ஒரு நாடகத்தை எழுதினார். ஆர்.யு.ஆர் என்று அதற்குப் பெயர். செக் மொழியில் உள்ள ரொபாடா (வேலை) என்பதிலிருந்து பிறந்ததே ரொபாட்! இந்த நாவலில் வேலைக்காரர்கள் அதாவது ரொபாட்டுகள் இயந்திர ராட்சஸர்கள். மனித உருவிலான இவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகின்றனர். இந்த நாவலிலிருந்து பிறந்த இயந்திர மனிதனே ரொபாட்! மனிதனைப் போலவே அனைத்து வேலைகளையும் சிந்தித்துச் செயல்படுத்த வேண்டுமானால் மனிதஅமைப்புடையதாகவே ரொபாட்டை , இயந்திரனை வடிவமைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். இந்தத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்று ஏற்கனவே அதிரடிச் சோதனைகளை நிகழ்த்தி விட்ட சைபர்னெடிக்ஸ் துறைப் பேராசிரியர் கெவின் வார்விக், “”மனிதனைப் போலவே இருக்கும் ரொபாட் சீக்கிரமே அனைவரிடமும் பிரசித்தி பெற்று விடுவான்” என்கிறார்.ஏற்கனவே பல்வேறு விரல்களையுடைய ரொபாட் வடிவமைக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வந்து விட்டது. நளினமான விரல் அசைவுகளுடன் செயற்கைத் தசைகளுடன் உருவாக்கப்பட்ட இந்த ரொபாட்டுகளில் தொடு உணர்வுக்கான சென்ஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பல வருடங்களாகக் கடினமாக உழைத்ததன் பலனே இந்த ரொபாட் என்கிறார் வார்விக்.ஆனால் மனித மூளையைப் போலவே இயந்திரனுக்கும் ஒரு மூளை அமைக்கப்பட வேண்டும். செயற்கை அறிவு ஊட்டப்பட வேண்டும்!இது சாத்தியம்தான் என்பதை 1997ல் நடந்த நிகழ்ச்சி ஒன்று நிரூபித்து விட்டது! உலகின் பிரபல முன்னணி செஸ் மாஸ்டரான கேரி கேஸ்பரோவுடன் விளையாட ஐ.பி.எம். நிறுவனம் வடிவமைத்த “டீப் ப்ளூ’ என்ற ரொபாட் தானாகச் சிந்தித்து ஒரு காயை நகர்த்தி விட்டது. விஞ்ஞானிகள் சொல்லாத இந்தச் செயலை டீப் ப்ளூ செய்ததால் உலகமே பரபரப்புக்குள்ளாகி விட்டது.

ஆனால் இந்த “காக்’ இரண்டு வயதுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியைக் கூட இன்னும் அடைந்தபாடில்லை.சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் இன்னொரு முறையைக் கையாண்டு ஜான் ஹாலந்த் என்பவர் ரொபாட்டை உருவாக்க ஆரம்பித்தார். டார்வினின் பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் இரண்டு குரோமோசோம்கள் போன்ற கணிணிகளில் புரோகிராமை உருவாக்கினார். இவை இரண்டும் இணைந்து புதிய குழந்தையாக ஒரு புரோகிராமை உருவாக்க, இப்படிப் படிப்படியாக ரொபாட் கற்க வேண்டியதைத் தானாகவே கற்று விடும் என்று அவர் தனது கொள்கையை உருவாக்கினார்.

1984ல் டக்ளஸ் லெனட் என்னும் விஞ்ஞானி ரொபாட்டிடம் பொது அறிவை ஏற்படுத்தப் புதுமையான முயற்சி ஒன்றைச் செய்தார். அதாவது தர்க்க ரீதியிலான அடிப்படை உண்மைகளைத் தொகுத்து அவற்றை அவர் ரொபாட்டிற்குக் கற்பிக்க முனைந்தார். உதாரணமாக, “ஒரு பொருள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது,’ “மழை பெய்யும் போது நின்றால் நனைய வேண்டியதுதான்’ இப்படி சுமார் நூறு லட்சம் சாமான்ய அறிவுத் தொகுப்பை அவர் தொகுத்தார். இதற்குப் பல கோடி “பிட்ஸ்’ கணிணியில் தேவைப்படுகிறது. இன்னும் பத்துக் கோடி உண்மைகளை அவர் தொகுத்து வருகிறார்!

ஆனால் சிக்கலான மனித மூளை கோடானு கோடி நியூரான் இணைப்புகளை உடையதாக இருக்கிறது! ஒரு நியூரானுடன் இன்னொரு நியூரானுக்குச் சராசரியாகக் குறைந்த பட்சம் சுமார் ஆயிரம் தொடர்புகள் உள்ளன. கோடானு கோடி நியூரான்களிடையே எத்தனை கோடி இணைப்புகள் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியாது!

பிரம்மாண்டமான ரொபாட் ஒன்று அமைக்கப்படுமானால் ஒரு வினாடிக்கு நூறு கோடி தகவல்களை அது அலசிப் பார்க்க முடியுமென்று வைத்துக் கொண்டால் மனித மூளை இதை விட ஆயிரம் மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுகிறது!

இந்த அளவு வேகம் உடைய ரொபாட்டை 2020ம் ஆண்டு வாக்கில் உருவாக்க முடியும் என்கிறார் செயற்கை அறிவுத் துறையில் வல்லுநரான ரேகர்ஞூவெய்ல் என்னும் விஞ்ஞானி.சரி, மனிதனுக்கு உள்ளது போன்ற பிரக்ஞையையும் உணர்ச்சிகளையும் ரொபாட்டிடம் உருவாக்குவது எப்படி? “”மனித மூளையைப் போலவே அமைக்கப்பட்டால்தான் மனித பிரக்ஞை மற்றும் உணர்ச்சிகளை ரொபாட்டிடம் உருவாக்குவது சாத்தியம்” என்கிறார் வார்விக்.

ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள பொம்மை ரொபாட்டுகள் சிரிக்கின்றன; அழுகின்றன!ஆனால் தனது லட்சியங்களைப் பிரக்ஞை மூலம் நிர்ணயிக்க மனிதனால் முடியும். சுற்றுப் புறச் சூழ்நிலைக்கு ஏற்ப அவனது உணர்ச்சிகள் மாறுபடுகின்றன. இவற்றை ரொபாட்டிடம் உருவாக்குவது மிகவும் கடினம் என்றாலும் 2050ம் ஆண்டு வாக்கில் அப்படி ஒரு முயற்சி வெற்றி பெறும் என்கிறார் வார்விக்.

பதினெட்டு ஆண்டுகளாக டெட்சுவன் அடோமு என்ற ரொபாட் ஜப்பானில் காமிக்ஸ் புத்தகங்களில் சித்தரிக்கப் பட்டுப் பெரும் வரவேற்பையும் புகழையும் பெற்று விட்டது. இது மனித குலத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு ராட்சஸர்கள், கொடியோரிடமிருந்து மனித குலத்தைக் காப்பாற்றி அமைதியை நிலை நாட்ட உதவும் கற்பனைக் கதாபாத்திரம்.

இதைப் போலவே மனித குலத்திற்கு நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் இப்போதுள்ள மின் விசிறி, மின் சலவைப் பெட்டி, மைக்ரோ அடுப்பு போல ரொபாட்டும் உதவும் நாள் வெகு தூரத்தில் இல்லை! மனிதனுடன் உறவாடி அவன் இடும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றும் இயந்திரன் உருவாகி வீட்டில் வளைய வரும் போது மனித குலத்தில் ஒரு புதிய பரிமாணம் உருவாகி விடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்!

அந்த நாளை உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!

—————————————————————————————————————————-

  • ஒரு மாதம் கழித்து படம்பார்த்துவிட்டு வந்து  விமரிசனம் எழுதினால் பதிவுலகில் கும்மி விடுவார்கள் என்று தம்பி தனிக்காட்டு ராஜா ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார் என்பதை நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்…
  • ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. எந்திரன் என்ற தமிழ் சொல் சரியா அல்லது இயந்திரன் என்ற தமிழ் சொல் சரியா?… (இரண்டு வரிக்கு மிகாமல் விடையை பின்னூட்டமிடுக)
  • காதல் அணுக்கள் பாட்டு இப்போ சூப்பர் ஹிட் என்று என் நண்பன் ரஜினிராஜ் கூறியது முற்றிலும் சரியே..(படம் ரிலீசுக்கு முன்ன கேட்டதவிட.. இப்போ கேட்கும்போது நல்லாத்தானே இருக்கு.. உண்மைய சொல்லுங்க..)
  • இதே ரோபோ மேட்ர வச்சி என் நண்பன் கிட்ட நா ஒரு கதய சொன்னேன்.. அப்ப ஓடினவன்தான் இன்னும் ஊரு திரும்பல.. (நண்பேன்டா…)
  • சொந்த சரக்கு இல்லீங்கோ.. நன்றி  :  http://sify.com/cities/mumbai/fullstory.php?id=13564014
Published in: on ஒக்ரோபர் 28, 2010 at 11:12 முப  Comments (8)  

வாழ்க்கை வளம்பெற…

உங்களைவிட மேம்பட்ட நிலையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஏனெனில் அவ்வாறு ஓப்பிட்டு பார்க்கையில் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையும், போதாமை குணமும் ஏற்படும்.

—————————————————————————————————————————- உங்களுடைய செயல்களில் நீங்களே குற்றம் காணாதீர்கள்.

—————————————————————————————————————————- தற்போது நீங்கள் பெற்றிருக்கும் நிலைமையை எண்ணி மிகவும் பெருமை கொள்ளுங்கள். இது உங்கள் எண்ணங்களில் இருந்து முரண்பட்டதாக தெரிந்தாலும் இந்த எண்ணமே உங்களை மேம்படுத்த முதற்படியாக விளங்கும்.

—————————————————————————————————————————- உங்களிடம் உள்ள நல்ல குணங்களை பட்டியலிடுங்கள். உங்களை நீங்களே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- உங்களுடைய எண்ணங்களில் உண்மையாக இருங்கள். உங்களுடைய எண்ணங்கள் தகுதியில்லாததாக தோன்றினால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- உஙகளுடைய முன்னேற்றத்தில் தாமதம் ஏற்படுவது இயற்கை. அவற்றிலிருந்து உங்கள் குறைகளை அறியுங்கள். அது அடுத்த கட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

—————————————————————————————————————————- வெற்றி, தோல்வி இரண்டையும் மனஅமைதியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- வாழுங்கள், மற்றவரை வாழ விடுங்கள்.

—————————————————————————————————————————- ஒருவர் மற்றவரை விட தாழ்ந்தவரும இல்லை, மேம்பட்டவரும இல்லை என்ற எண்ணத்தை மனதில் பதிய வையுங்கள். ஒவ்வொரு மனிதனும் தங்களுக்கென்று தனித்துவம் பெற்றிருபபர்.

—————————————————————————————————————————- அதிகாரத்தைக்கொண்டு கலகம் செய்யாதீர்கள். நட்பானவராக திகழுங்கள்.

—————————————————————————————————————————- அளவான பொறுமை கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————- நீங்கள் செய்த குற்றங்களையும் தவறுகளையும் அடுத்தவர்கள் மீது திணிக்காதீர்கள்.

—————————————————————————————————————————- மற்றவர்களை இழிவுபடுத்தாதீர்கள்.

—————————————————————————————————————————- அவசியமான செயல்களுக்கு மட்டும் திட்டமிட்டு செயல்படுங்கள்.

—————————————————————————————————————————- வாக்குவாதத்தினால் ஒரு செயலில் வெற்றி காண இயலாது. மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு செவி கொடுங்கள். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்.

—————————————————————————————————————————-வெளித்தோற்றத்தின் அடிப்படையில் மற்றவர்களை எடை போடாதீர்கள்.

—————————————————————————————————————————-

மேற் கூறியவற்றை பின்பற்ற இயலாது என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் இதுபோன்ற  மொக்கைகளை படிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். (யாருப்பா அது… இந்த ப்ளாக்கையே  நிறுத்தச்சொல்லுறது…)

Published in: on ஒக்ரோபர் 20, 2010 at 5:40 முப  Comments (2)  

பட்டை…

 

கண்ணாடி முன்னால் நின்று என் தொந்தியை அழுத்திப்பிடித்துக்கொண்டிருந்த இடுப்புபட்டையை நன்றாக பிடித்து இறுக்கினேன். மூச்சை நன்றாக உள்ளிழுத்து ஒரு பெரிய மூட்டையை நன்றாக இறுக்கும் லாவகத்துடன் இன்னும் நன்றாக இறுக்கினேன். என்னுடைய கணிப்பின்படி  தற்போது தொந்தி குறைந்திருக்க வேண்டும்.  இன்னும் நன்றாக இறுக்கினேன். கடந்த மூன்று வாரங்களாக நான் நடைபயிற்சி மேற்கொண்டது பலன் தந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மேலும் இறுக்கினேன். கண்டிப்பாக தொந்தி ஒரு சுற்று குறைந்திருக்க வேண்டும்.. ம்… இன்னும் நன்றாக இறுக்கி….. பட்..  ஊறிய ஊசிப்பட்டாசு வெடித்ததுபோன்ற ஒரு சத்தம். என் கைகளில் இரு துண்டுகளாக என்னுடைய இடுப்புபட்டை.  அலுவலகம் செல்ல அவசரமாக ஆயத்தமான சூழலில் எதிர்பாரா வண்ணம் நிகழ்ந்த இந்த நிகழ்வினால் நான் செய்வது அறியாது திகைத்து நின்றேன். நான் திகைத்ததற்கு காரணமிருந்தது. என்னுடைய கால்சட்டை மற்றும் கைசட்டையை விட விலை அதிமானது இந்த இடுப்புபட்டை. சுமார் 400 ரூபாய்க்கு  (ரூபாய்க்கான சின்னம் கீபோர்டுல எங்கப்பா இருக்குது?) சென்னையில் உள்ள ஒரு உச்சரிக்க கடினமான பெயருடைய ஒரு விற்பனை அங்காடியில் ஏதோ ஒரு உந்துதலால் சுமார் நான்கரை வருடங்களுக்குமுன்(?) நான் வாங்கியது.

கருமையான தோலினாலான பளபளக்கும் இந்த இடுப்புபட்டையை நான் கட்டியதிலிருந்து எனக்கு நடந்தது எல்லாமே நல்லவையாக அமைந்தது என நான்  நம்பினேன் (எனக்கு கல்யாணம் என்று ஒன்று ஆனது இதை வாங்கிய பிறகுதான் என்றால் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்). இதை நான் வாங்கி கட்டியதிலிருந்து என்னை எப்பொழுதும் கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கும் என் மேலதிகாரி  திடீரென என்னை கரிசனமாக நடத்தியது எனக்கு வியப்பளித்தது (‘சொம்பு தூக்கனத்துகு எப்படி காரணத்த கண்டுபிடிக்கிறான் பாரு’ என்று என் எதிரிகள் யாராவது உங்களிடம் கதைத்தால் நீங்கள் நம்ப வேண்டாம்). நீண்ட நாட்களாக நான் கழட்டி விட வேண்டும் என்று நினைத்திருநத என் நண்பன்(?) ஒருவனை காணாமல் போகச்செய்தது இந்த இடுப்புபட்டியின் ராசியில்தான் என நான் அகமகிழ்ந்தது (நாம தினமும் ஓசியில் டீக்குடிச்சதுக்கு அவன் நம்மள கழட்டி விட்டிருப்பானோ? சே.. சே.. அப்படியெல்லாம் இருக்காது..) என இதன் பெருமைகளை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த என் இடுப்பு பட்டை இப்போது இரு துண்டுகளாக என் கைகளில். ‘என்னங்க இன்னுமா ஆபீசுக்கு கிளம்பல..’  என் மனைவியினுடைய குரல் கேட்டது. துன்பம் வருவதற்க்குள் இடுப்பு பட்டை இல்லாமல் இன்செய்துகொண்டு இரயிலைப்பிடிப்பதற்க்காக இல்லத்தை விட்டு இறங்கினேன் (எத்தன இ பாருங்க..).

இடுப்பு பட்டை இல்லாமல் இருப்பது எவ்வளவு கடினம் என எனக்குப்புரிந்தது.  என்னுடைய கால்சட்டையை அடிக்கடி தொந்தியின் மேலே இழுத்துவிட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு தொந்தி இருப்பது எவ்வளவு சௌகரியமாக இருக்கிறது. இதைப்போய் அநியாயமாய் துன்பத்தின்(?)   குடைச்சல் காரணமாய் குறைக்க இருந்தேனே.  சுற்றும் முற்றும் பார்த்தேன். இரயிலடியில் கூட்டமதிகமாய் இல்லாவிட்டாலும் வந்திருந்த அனைவரும் சொல்லிவைத்துபோல இடுப்பு பட்டை அணிந்தவர்களாகவே நின்றுகொண்டிருந்தார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. ஒரு மனநலம் குன்றிய ஒரு பரட்டைதலையுடைய ஒருவன் (இவர்களை இன்டலெக்ச்சுவல் டிசாடர் பர்சன்ஸ் என்று இனிமேல் மரியாதையாய் அழைக்கவேண்டும் என்று சட்டம் வரப்போவதாய்   எப் எம் ரேடியோலில் காபி வித் சுசி கூறியதாய் நினைவு) கிழிந்த அழுக்கேறிய சட்டையின் முன்புறத்தை தன் முக்கால் கால்சட்டையினுள் திணித்துக்கொண்டு  ஒரு அறுந்த கோணிக்கயிறினை தம்முடைய இடுப்புப்பட்டையாய் இறுக கட்டியிருந்தான். அவன் என்னை ஒரு மாதிரியாய் பார்த்து சிரித்தான். நான் அவனிடமிருநது விலகி நடந்து  ஆளில்லா ஓரிடத்தில் நின்றேன். என்னை கடந்துசென்றவர்களில் சில பேர் என்னுடைய இடுப்பை பார்த்துவிட்டு இடுப்புபட்டியில்லாத என்னை ஏளனமாய் பார்த்துவிட்டு சென்றதுபோல எனக்கு தோன்றியது. எல்லாம் பிரம்மை. வழக்கம் போல இரயில் தாமதமாய் வந்தது. இரயில் பெட்டியினுள் ஏறினேன். அமர இடமில்லாவிட்டாலும் தாராளமாய் நிற்க இடமிருந்தது. இடப்புற வாயிலின் அருகே வசதியாய் நின்றுகொண்டு வண்டியினுள் நோட்டமிட்டேன். என்னெதிரே கல்லூரி மணவர்கள்போல தோற்றமளித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஈஷிண்டு அமர்ந்து சம்பாஷித்துக்கொண்டிருந்தனர். சம்மந்தம் இல்லாமல் பாலினம் மாறி எதிரெதிர் தொடைகளை தட்டிக்கொண்டு திடீர் திடீரென சிரித்துக்கொண்டார்கள்.  வாழ்க கலாச்சாரம் என்று நினைத்தபடி நான் அவர்களை நோட்டமிட்டேன். அந்த கூட்டத்திலிருந்த ஒரு மஞ்சள் ஆடையணிந்து கண்ணாடி அணிந்திருந்த ஒருத்தி (இனிமேல் மஞ்சுளா) என்னை அவள் கண்ணாடியினூனே பார்த்தாள். நான் அவளைப்பார்பபதை தவிர்த்தாலும அவள் என்னை தொடர்ச்சியாக பார்ப்பது எனக்கு தெரிந்தது . அதுவும் குறிப்பாக என் இடுப்பை பார்ப்பது எனக்கு புலனானது. இடுப்பு பட்டை அணியாதது அவ்வளவு மோசமா. அவள் இப்போது தன் அருகே அமர்ந்திருந்த அந்தப்பையனிடம் (தாடியும் அவனும் கண்றாவி..)  ஏதோ மெதுவாக கதைக்க அந்தபையனும் என்னை குறிப்பாக என்னுடைய இடுப்பை பார்த்தான். அடப்பாவிகளா இடுப்புபட்டை அணியாமல் இன் செய்தது அவ்வளவு பெரிய கலாச்சார இழிவா? கடவுளே.. சம்பளம் வந்ததும் முதலில் இடுப்புபட்டையை வாங்கிவிட வேண்டியதுதான். இப்போது அவர்ளுடைய சிரிப்பொலி அதிகமானது.  நல்ல வேளையாக நான் இறங்கவேண்டிய நிலையமும் வந்துகொண்டிருந்தது.  நான் இறங்க ஆயத்தமானபோது அவர்களும் இறங்குவதற்கு ஆயத்தமாகி என்னருகே வந்து நின்றார்கள்.  என்னைப்பார்த்துக்கொண்டிருந்த மஞ்சுளா இப்போது என்னருகே.  நிலையம் வந்தது. நான் சட்டென இறங்கி நடக்கலானேன். என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. திரும்பிபார்க்காமல் வேகமாய் நடந்தேன். இப்போது சத்தம் பலமாய். திரும்பிப்பார்த்தேன். மஞ்சுளா இப்போது என்னைப்பார்த்து வந்துகொண்டிருந்தாள். இவள் ஏன் என்னை அழைக்கிறாள் என நான் நினைத்துக்கொண்டிருந்தபோதே மஞ்சுளா என்னருகே வந்து நின்று தன் கண்ணாடியினூடே என்னை நோக்கி ‘அங்கிள்.. உங்க பேண்ட் சிப் தொறந்திருக்கு’ என்று கூறினாள்.

Published in: on செப்ரெம்பர் 24, 2010 at 1:26 பிப  Comments (2)  

ரிஸ்க் எடுக்கறதும் ரெஸ்க் சாப்புடறதும்…

ரிஸ்க் எடுக்கலாம்.  அதுக்காக இப்படியா. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை சொர்கத்துக்கே போய் நிச்சயிக்கப்படுகின்றன என்று தப்பா புரிஞ்சுகிட்டாங்களோ… 

Published in: on செப்ரெம்பர் 10, 2010 at 11:32 முப  Comments (3)  

கவிதைப்போட்டி…

மேற்கண்ட புகைப்படத்திற்கு தகுந்த பின்னூட்டகவிதைகள் வரவேற்க்கப்படுகின்றன. யாருமே கவிதை எழுத முன்வராதபட்சத்தில் நானே கவிதை எழுத வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை மட்டுமல்லாது அவர்கள் என் கவிதையைப்படித்துவிட்டு புறமுதுகு காட்டி ஓட வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்…

பின் குறிப்பு  :    தனிக்காட்டு ராஜா தம்பி இந்த போட்டியிலிருந்து விலகிக்கொள்ளவும். மற்ற கவிஞர்கள்  எழுதும் சிறந்த கவிதைகளுக்கு பரிசு நிச்சயம்… கவிதைய எழுதுங்க… பரிச அள்ளுங்க…

 

Published in: on ஓகஸ்ட் 28, 2010 at 11:26 முப  Comments (12)  

காரணம் கண்டுபிடிச்சாச்சு…

‘நானும் ஒரு ரெண்டுநாளாப்பாக்கறேன்… உன் முகமே சரியில்லயே.. என்ன ஒரே சோகமா இருக்க..’ என்றான் மயில்சாமி. ‘எனக்கு ஒண்ணும் இல்லயே..’ ‘இருந்தாலும் இந்த கேள்விய நீ நம்ம ஆனந்த் கிட்ட கேட்டிருக்கணும்..’ என்றேன் அவனை சீண்டுவதற்க்காக. ‘எந்த ஆனந்த்..’ என்றான். ‘நீ பேப்பரே படிக்கறது இல்லயா.. நம்ம நாட்டுக்கு  செஸ் விளையாடி பெரும சேத்த நம்ம விஸ்வநாதன் ஆனந்த்.. அவரத்தான் சொன்னேன்..’ என்றேன். ‘அட அந்த விசயமா..’ என்றபடி உற்சாகமானான்.  தொண்டையை சரிசெய்துகொண்டு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ‘உனக்கு தெரியாத உண்மைய நான் சொல்லுறேன் கேளு..’ என்றான் மெதுவாக. ‘இந்தாளு இன்னாப்பண்ணியிருக்கான் தெரியுமா..’ ’எந்த ஆளு..’ என்றேன்.  ‘இன்னாப்பா நீ இந்த ஆனந்துதான்(?)..  சமீபத்துல  உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்துச்சு இல்லயா..’ என்றான். ‘ஆமா.. அதுக்கென்ன இப்ப..’ என்றான். ‘உலக கோப்ப பைனலுல நம்ம நாட்டுல பலபேர்  ஸ்பெயின் அணி ஜெயிக்கும்ன்னு சப்போர்ட் பண்ணாங்க இல்லயா..’ என்றவனை இடைமறித்து ‘யோவ்.. பால் ஆக்டபஸ் சொன்னதக்கேட்டுதான் பலபேர் ஸ்பெயின் அணி ஜெயிக்கும்ன்னு சப்போர்ட் பண்ணாங்க.. அதுக்கும் இந்த ஆனந்துக்கும் என்ன சம்மந்தம்..’ என்றேன்.  ‘அவசரத்துக்கு பொறந்தவனே சும்மா நா சொல்லுறத பொறுமையாக்கேளு.. கடசீல உலககோப்பய ஸ்பெயின் ஜெயிச்சுருச்சு இல்லயா.. அப்ப ஸ்பெயினுக்கு சப்போர்ட் பண்ண கூட்டத்துல நம்ம ஆனந்தும் ஒரு ஆளு..’என்றான்.  ‘அதனால’.. என்றேன் புரியாதவனாக. ‘எல்லோரும் ஸ்பெயினுக்கு சப்போர்ட் பண்ணது முக்கியமில்ல.. நம்ம ஆளு விஸ்வனாதன் ஆனந்த் சப்போர்ட் பண்ணதுதான் பெரிய விசயமாப்போச்சு.. ஏன்னா நம்ம இத்தாலி டீம் விளையாடும்போது சப்போர்ட் பண்ணாத இந்த ஆளு ஸ்பெயின் அணி விளையாடும்போது மட்டும் சப்போட் பண்ணுறான்னா ஏதோ உள்குத்து இருக்குதுன்னு கண்டுபிடிச்சி நம்ம டெல்லி ஆளுங்க உளவுத்துறைய உசுப்பி விட்டுச்சு..’  ‘அப்புறம்..’ என்றேன் நான் ஆர்வமாக. ‘அப்புறம் என்ன.. நம்ம உளவுத்துற ஆளுங்க நேரா பிளைட் புடுச்சு ஸ்பெயினுக்கு போய் பாத்திருக்காங்க.. அங்கனப்போன பிறகுதான் அந்த விசயமே உலக்கு தெரிஞ்சுது..’ என்றான்.  நான் ஆர்வமாக என்ன விசயம்’ என்றேன். ‘நீ பேப்பரே படிக்கறது இல்லயா..’ என்றான் நான் வைத்த ஆப்பை எடுத்து எனக்கு வைத்துக்கொண்டே. ‘சரி விசயத்துக்கு வாப்பா..’ என்றேன். ‘நம்ம ஆளுங்க ஸ்பெயின் ஏர்போட்டுல இறங்கின உடனே பக்கத்தில இருந்த ஒரு ஓட்டல்ல விசாரிச்சு இருக்காங்க..  விசாரச்சுதுல நம்ம ஆனந்து அங்கன ஒரு சின்னவீட்ட வாங்கி குடியும் குடித்தனுமா இருந்திருக்காரு..’ என்றான்.  ‘என்னப்பா இப்படி சொல்லுறே.. நான் கேள்விப்பட்ட வரையில ஆனந்து நல்ல ஆளுதானே.. அவரு அப்படியெல்லாம் சின்ன வீடு செட்டப் செஞ்சியிருக்க வாய்ப்பே இல்லயே..’ என்றேன்.  ‘அட நாசமாப்போனவனே.. உன் புத்திய என்ன சொல்ல.., நான் சொன்னது அவரு ஸ்பெயின் நாட்டுல ஒரு சின்னதா ஒரு  வீடுவாங்கி தன்பொண்டாட்டிப்புள்ளங்களோட சந்தோஷமா வாழுறாறுன்னு’ என்றான். ‘சரி அதுக்கென்ன இப்ப’ என்றான். ‘அதுக்கென்னவா.. இப்ப நாம அவருக்கு டாக்டர் பட்டம் குடுக்கறம்ன்னு வச்சுக்க.. அவரு அந்த பட்டத்தவாங்கினு திரும்பவும் ஸ்பெயினுக்கே போயி அங்கனயே தொழில் பண்றாறுன்னு வையி.. அப்ப உள்ளூர்லே டாக்டர் பட்டம் வாங்கி உள்ளூர்லே டாக்டர் தொழில் செய்யறவன்லாம் கேனயா..  அப்புறம் டாக்டர் கலைஞர் ஐயா, டாக்டர் புரட்ச்சித்தலைவி அம்மா,  டாக்டர் பத்மசிரி கமல்ஸாசன் அவர்கள், டாக்டர் இளிய தளபதி விஜய் அண்ணா, ஐய்யையையோ… மறந்துட்டேனே.. தைலாபுரம் மருததுவர் ஐயா, மருத்துவர் மகன் ஐயான்னு நிறைய டாக்டர்கள் நிறைஞ்ச தமிழ்நாட்டுல போராட்டம் வெடிச்சுதுன்னு வச்சுக்க அப்புறம் நாடு தாங்குமா.. அதானாலத்தான் ஆனந்துக்கு டாக்டர் பட்டம் குடுக்க டெல்லியில இருக்குற ஆளுங்க…………..என்று அவன் சொல்லிக்கொண்டிக்கும்போதே மயங்கி சரியத்துவங்கினேன்.

Published in: on ஓகஸ்ட் 27, 2010 at 8:08 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

கவித…

 

முழுசா முகத்த காட்டாம 

செவுப்பா உன் உதட்ட காட்டி

பதமா என்ன பாக்க வச்சிட்டுயே…

நீ என்னப்பாக்காத…

நா எங்கண்ணால உன்னப்பாத்தாலும் நீ

உங்கண்ணால என்னப்பாக்காத…

மீறி நீ என்னப்பாத்தயன்னா

அப்புறம் நமக்கு கண்ணாலம் கடியாது…

—————————————————————————————————————————-

பின் குறிப்பு  :   மேற்கண்ட கவிதையை கவிதை என்று ஒத்துக்கொள்ளாதவர்கள் மட்டும் பின்னூட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Published in: on ஜூலை 31, 2010 at 7:09 முப  Comments (1)  
Travel Twosome

உங்களுக்காக...

பேயோன்

பொருள் கவியும் சொற்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

உங்களுக்காக...

Charu Nivedita

உங்களுக்காக...