வரைபடத்தை மீண்டும் பாத்தேன். வரைபடத்தில் சிவப்புநிறத்தால் சுழிக்கப்பட்டிருந்த வட்டவடிவ குறியினைச்சுற்றி அமைந்த குறிப்புகளை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து நான் தற்போது நின்று கொண்டிருககும் இந்த சாலை என்னுடைய திட்டத்தின்படி சரியான பாதைதானா என உறுதிசெய்துகொண்டேன். எனக்கு கொடுக்கப்பட்டிருந்த பணியினை முடிக்க இன்னும் சில மணித்துளிகளே இருந்தன. உண்மையைச்சொல்லப்போனால் நான் ஒரு மனிதவெடிகுண்டு. ஆம் என்னுடைய வாழ்க்கை இன்னும் சில மணிநேரங்களில் முடிந்துவிடப்போகின்றது. நான் உயிருக்கு பயந்தவனல்ல. என்னுடைய இனத்தின் மீதான கோபம்… அதனுடைய இயலாமையின் கோபம் என்னை மனித வெடிகுண்டாக மாற்றியிருந்தது. அதனால் என்னை நான் இணைத்துக்கொண்டதுதான் என்னுடைய E.E.E. இயக்கம். இயக்கத்தின் நோக்கம் எங்கள் இனத்தின் இயலாமையை இல்லாமலாக்கி விடுவது. என்னுடைய இயக்கம் மற்றும் அது சார்ந்த கொள்கைகளுக்கும் நான் கட்டுப்பட்டவன். அந்த கட்டுப்பாடு இட்ட கட்டளையால் இன்று நான் இந்த உயிர்க்களத்தில்.
ஆள் அரவமற்ற அந்த சாலையோர தேநீர்கடையில் என்னுடைய கடைசி தேநீரைப்பருகிக்கொண்டிருந்தேன். மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. நான் புறப்பட ஆயத்தமானேன். தேநீர்க்கடைக்காரர் என்னைப்பார்த்து ‘தம்பிக்கு ரொம்ப அவசரமோ.. மழை விட்டதும் போகலாமே..’ என்றார். அவர் என்னைப்பார்த்து அனுதாப்பட்டது என்னுடைய பருமனான உருவத்தைப்பார்த்துதான் என நான் யூகித்துக்கொண்டேன். இப்போது நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். நான் இங்கு வந்து போனது நாளை இந்த உலகுக்கு தெரியவந்தால் எத்தனைவிதமான இன்னல்களுக்கு இவர் ஆளாக நேரிடும்… அப்போது இதுபோல் என் மேல் இவர்அனுதாபப்பட முடியுமா… அதற்க்கு பேசாமல் இப்போதே அவர் என்னுடன் வந்துவிடுவது சாலச்சிறந்தது… என நினைத்துககொண்டேன். நான் என்னுடைய மழைக்கோட்டை சரிசெய்துகொண்டேன். மழைக்கோட்டின் உள்ளே சரியாக வடிவமைக்கப்பட்ட உயர்அழுத்தத்திறன் நிரம்பிய பொதுமொழியில் சொல்லவேண்டுமென்றால் உருளை உருளையாய் மஞ்சள் நிறத்தில் பல வெடிகுண்டுகள் வரிசையாய் பொருத்தப்பட்டிருந்தன. அத்தனை வெடி குண்டுகளையும் ஒரே சமயத்தில் உயிர்ப்பிக்கப்போகும் சிவப்பு நிற பொத்தான் என்னுடைய இடதுகை ஆட்காட்டிவிரலுக்கும் கட்டை விரலுக்குமிடையே அமைந்திருந்தது. இந்த சிவப்புநிற பொத்தான்தானை அழுத்தப்போவதுதான் என்னுடைய இறுதி இயக்கமாக இருக்கவேண்டும். நான் தேநீர் கடைக்காரரிடம் பிரியா(?)விடைபெற்றுக்கொண்டு என்னுடைய இலக்கைநோக்கி என்னுடைய விலையுர்ந்த(?) பைக்கை விரட்டினேன்.
சாலை வேகமாக பின்னோக்கிச்சென்றுகொண்டிருந்தது. தூரத்தில் நகரம் என்னை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருந்தது இன்னும் சற்று நேரத்தில் அது தன் அமைதியை இழக்கப்போகிறது எனத்தெரியாமலேயே. நான் சற்று வேகமெடுத்தேன். எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களை எல்லாம் அலட்சியமாய் கடந்து முன்னேறிச்சென்று கொண்டிருந்தேன். மழை இன்னும் தூறிக்கொண்டிருந்தது. என்னுடைய கடந்தகாலம் என் கண்முன்னே வந்து நின்றது. மழையில் அப்பா வாங்கித்தந்த புது சைக்கிளில் நனைந்தபடி சென்று அம்மாவிடம் அடிவாங்கியது., பின் சினிமாக்கொட்டகையில் அதே சைக்கிளை தொலைத்துவிட்டு வந்து அப்பாவிடம் அடிவாங்கியது., கல்லூரி காலத்தில் யாரோ ஒருவன் பின்னாலிருந்து கல்லெறிந்ததற்காக மாணவர் கூட்டத்தின் முன்னால் நின்றுகொண்டிருந்த நான் நன்கு வளர்ந்த ஒரு போலீஸ்காரர் கையினால் அடிவாங்கியது., பின்னர் இயக்கத்தில் சேர்ந்து வளர்ந்து பயிற்சியின் போது துப்பாக்கியை தவறுதலாய் பிடித்து தலைவனிடம் அடிவாங்கியது என அடிபடும் படலம் என் முன்னே விரிந்து மறைந்தது. இந்த நிகழ்வுகளில் எனக்கு பலமுறைகோபம் வந்தபோதும் என்னுடைய இயலாமை என்னை ஊமையாக்கிவிடும்.. ஹ்ம்..
நகரம் என்னை அன்போடு வரவேற்க்கின்ற அந்த எல்லையில் நான் வேகத்தை குறைத்து மெல்ல ஊர்ந்தேன். திடீரென்று கீரீச்… என்ற சத்தத்துடன் ஒரு ஆட்டோ என்முன்னேவந்து என்னை மறித்துக்கொண்டு நின்றது. ‘த்தா… கண்ணுதெரியல.. ஃபாரின் பைக்குல உக்காந்துட்டா நீ என்ன பிளைட்ல போறதா நினைப்போ..’ ‘ரோட்டுல இருக்கிற தண்ணிய என் வண்டிக்குள்ள அடிச்சுடடு போற..’ என்றபடி என் முன்னே கோபமாய் வந்து இறங்கினான் அந்த ஆட்டோ ஓட்டுனன். சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆள் அரவமில்லை. நான் அவனைவிட்டு விலகும் பொருட்டு என்னுடைய பைக்கை வேறு திசையில் திருப்ப முயல்கையில் ஒடிவந்து என்னுடைய மழைக்கோட்டை இறுகப்பிடித்துக்கொண்டான். ‘த்தா.. நா பேசிக்கினே இருக்கேன்.. நீ பாட்டுக்குனு கம்முன்னு போறியே.. போயிடிவியா..’ என்றவனின் கைகளை விலக்க முயன்றேன். திடீரென அவன் என்னை அடிக்க முயல நான் விலக அவனுடைய இரண்டாவது முயற்சியில் அவனுக்கு வெற்றி கிட்டி அவன் என்னை இப்போது அடித்தே விட்டான். விரு விருவென என் தலையின் உச்சிக்கு கோபம் சென்றுகொண்டிருந்தது. ‘த்தா.. கொன்னுறுவேன்’ என கூறியவண்ணம் அவனுடைய அடுத்த அடி என்மேல் விழுவதற்க்கும் என்னுடைய விரல் அந்த சிவப்பு பொத்தானை அழுத்துவதற்க்கும். . . .